திருப்பூர்: நாளுக்குநாள் அதிகரித்து வரும் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வை, பள்ளி, கல்லூரி மாணவர் மத்தியில் ஏற்படுத்த,கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் வாகன போக்குவரத்து, அதற்கேற்ப ரோடு வசதி இல்லாமை, விதிமுறை பின்பற்றாதது போன்ற காரணங்களால், அதிகளவில் சாலை விபத்து ஏற்படுகிறது. இதில், கொடுங்காயம் ஏற்பட்டு சிலர், மாதக்கணக்கில் சிகிச்சை பெறும் அவலம் ஏற்படுகிறது. சிலர், கை மற்றும் கால்களை இழந்து, முடமாகின்றனர். உயிரிழப் பும் ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது.
சாலை விபத்தில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. டீன்-ஏஜ் வயது மாணவ, மாணவியர், அதிவேகம் கொண்ட டூவீலர்களில், பறப்பது, சில நேரங்களில் உயிரை பறித்து விடுகிறது. போக்குவரத்து அதிகமுள்ள ரோடு, நெரிசலான பகுதிகள், அபாய வளைவுகளில்,நிதானமின்றி வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது, எதிரில் திடீரென வாகனம் வந்தாலோ அல்லது வாகனம் கட்டுப் பாட்டை இழந்தாலோ, நிலைகுலைந்து விபத்தில் சிக்குகின்றனர்.
18 வயது நிரம்பாத, டிரைவிங் லைசென்ஸ் பெறாத எவரும் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதியில்லை என்ற மோட்டார் வாகன போக்கு வரத்து சட்டம், மாணவ - மாணவியருக்கு பொருந்தும் என்பதை, ஆர்.டி.ஓ., அதிகாரிகளும், போலீசாரும் மறந்து போனது துரதிஷ்டமானது.
மேலும், பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றால், டூவீலர் வாங்கித்தருவதாக,பெற்றோரில் சிலர், குழந்தைளுக்கு ஆசைவார்த்தை காட்டி, அவர்களை தூண்டுகின்றனர். அதன்பின்,பிள்ளைகள் கேட்கும் வாகனத்தை வாங்கித்தரும் அவர்கள், கட்டுப்பாடற்ற வேகத்தில் வாகனம் ஓட்டிச் செல்வதை கண்டிப்பதில்லை.
திருப்பூர் ரோடுகளில் காலை, மாலை நேரங்களில் இரண்டு பேர், மூன்று பேராக மாணவ, மாணவியர் வாகனங்களில், கட்டுப்பாடற்ற வேகத்தில், வளைந்து நெளிந்து ஓட்டிச் செல்வது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு கிலியை ஏற்படுத்துகிறது. மாணவர்களில் பலர், ஹெல்மெட்&'டும் அணிவதில்லை.
பள்ளிகள் சார்பில், சாலை விழிப்புணர்வு ஊர்வலம், பேச்சு, கட்டுரை போட்டி நடத்துவதோடு ஆசிரியர்களின் கடமை முடிந்து விடுகிறது என நினைக்கின்றனர். ஆசிரியர்களை கேட்டால், பள்ளி வளாகத்தில் மட்டுமே மாணவ, மாணவியரை கட்டுப்படுத்த முடியும்; வெளியிடங்களுக்கு அவர்கள் வாகனங்களில் செல்வதை தடுக்க வாய்ப்பில்லை என, தட்டிக்கழிக்கின்றனர்.
பிள்ளை நன்றாக படித்து, அதிக மதிப்பெண் பெற்று, சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்து, எதிர்காலம் பிரகாசமாக அமைய வேண்டும் என்ற கனவு, அனைத்து பெற்றோருக்கும் உண்டு. அதே நேரத்தில்,விடலை பருவத்தில் உள்ள அவர்களுக்கு பொறுப்புணர்வு குறித்தும், விபத்தால் ஏற்படும் பாதிப்பு, உயிர் பாதுகாப்பு குறித்தும் தேவையான அறிவுரை வழங்குவது பெற்றோரின் தலையாய கடமை. இதில்,பள்ளி நிர்வாகங்களும் முன்வந்து செயல்பட வேண்டும். பெற்றோரும், கல்வித்துறையும் கைகோர்த்து,சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வை, மாணவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment